புதுதில்லி: அயோத்தி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 13 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அதுமுதல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இதே வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரியும், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட பலர் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் புதனன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் மூல வழக்கு மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.