மகாராஷ்டிர மாநிலம், மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இந்த விபத்து நேரிட்டது. இதில், 23 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.8 லட்சமும், காயமடைந்த 19 பேருக்கு அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடு அளிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள ரயில்வே இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் பதிவாளர் கே.பி.யாதவ் கூறுகையில், 'இந்தத் தீர்பாயத்தின் மும்பை கிளை எல்பின்ஸ்டோன் விபத்தில் சிக்கிய 36 பேருக்கு செவ்வாய்க்கிழமை இழப்பீடு வழங்கியது.
விபத்துக்குப் பிறகு, 39 பேர் இழப்பீடு கோரி மும்பை இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்தனர். சில தொழில்நுட்பக் காரணங்களால் 3 பேருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையை புதன்கிழமை வழங்க இயலவில்லை. அவர்களுக்கு விரைவில் இழப்பீடு அளிக்கப்படும். ரயில்வேயும், அந்தத் துறை அமைச்சகமும் இழப்பீடு விவகாரத்தில் தலையிடாத காரணத்தால் எங்களால் விரைவாக இழப்பீடு அளிக்க முடிந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, கூட்ட நெரிசல் விபத்து நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். மகாராஷ்டிர அரசு, தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் என்று அறிவித்திருந்தது.
'கடந்த 6 ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் ரயில்வே சிக்கி வருவதால், இழப்பீடு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த 6 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது' என்று பாஜக எம்.பி.யான கிரித் சோமையா தெரிவித்தார்.