முகப்பு
இந்தியா

ஐன்ஸ்ட்டீனுடையதை விட உயர்ந்த தத்துவம் வேதங்களில் உள்ளதாக ஹாக்கிங் கூறியுள்ளார்: அசர வைத்த மத்திய அமைச்சர்! 

ஐன்ஸ்ட்டீனுடைய e=Mc2 சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 மார்ச், 2018 at 4:23 PM
பகிர்:

இம்பால்: ஐன்ஸ்ட்டீனுடைய e=Mc2 சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்திய அறிவியல் கழகத்தின்' 105-ஆவது கூட்டத் துவக்க விழா இம்பாலில் நடைபெற்றது. இதனை அத்துறைக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்பொழுது ஐன்ஸ்ட்டீனுடைய e=Mc2 சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேச்சில் கூறியதாவது:

நாம் சமீபத்தில் மிகப்பெரிய வானியல் துறை விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்கினை இழந்துள்ளோம். அவர் ஒருமுறை தனது உரை ஒன்றில், e=Mcஎன்னும் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனுடைய சார்பியல் தத்துவத்தை விட, உயர்ந்த தத்துவம், இந்தியாவின் வேதங்களில் உள்ளதாக வலுவாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இவ்வாறு அவர் தனது பேச்சில் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதற்கான ஆதாரம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:

அதன் நீங்கள்தான் கண்டறிய வேண்டும். அவர் சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி நீங்கள் கொஞ்சம் உழைத்துக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்க இயலா விட்டால், தில்லியில் வந்து என்னிடம் தெரிவியுங்கள். நான் இதை ஒரு பொதுவான அரங்கில்தான் தெரிவித்துள்ளேன். ஸ்டீபன் ஹாக்கிங்கினை அந்த இடத்தில் நினைவு கூற  வேண்டும் என்று விரும்பினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் இணையத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் www.servveda.org என்ற இணையதளத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தினை "வேதங்களில் அறிவியல் ஆராய்ச்சி" என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பினை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல முன்பு மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் கழகத்தின்' 102-ஆவது கூட்டத்தில், 7000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆகாய விமானங்களின் பயன்பாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட விஷயம் சர்ச்சையினை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.