கால்நடைத் தீவன 4-ஆவது ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என திங்கள்கிழமைதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ.900 கோடி ஊழல் புரிந்ததாக லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இதில், டிசம்பர் 1995 மற்றும் ஜனவரி 1996-ம் ஆண்டுகளில் தும்கா கருவூலத்தில் ரூ. 3.13 கோடி ஊழல் புரிந்தது தொடர்பான வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. விரைவில் இதன் தண்டனை விவரங்களும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி இருமுறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, கால்நடைத் தீவன ஊழல் முதலாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2-ஆவது வழக்கில் மூன்றரை ஆண்டுகளும், 3-ஆவது வழக்கில் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.
Advertisement
இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு இதுவரை 13.5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5-ஆவதாக தொடுக்கப்பட்ட வழக்கு, ராஞ்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.