தொழிலதிபரை மிரட்டி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிழல் உலக தாதா அபு சலேமை வரும் 27-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இதுதொடர்பான விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த இயலவில்லை என்று சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதையடுத்து, இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் 27-ஆம் தேதி அபு சலேமை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூடுதல் நீதிபதி தருண் ஷெராவத் உத்தரவிட்டார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு தில்லியில் தொழிலதிபர் அசோக் குப்தா என்பவரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக அபு சலேமுக்கு எதிராக புகார் எழுந்தது. இந்த வழக்கில் தனக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று அபு சலேம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அவர் குப்தாவிடம் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் பதிவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2005-இல் போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட சலேம், 1999-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கிலும், வேறு சில வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிரட்டி பணம் வசூலித்த வழக்கில் மட்டும் அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.