பெங்களூரு: கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா ஆட்சியில் அமர்ந்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்களை தனி விமானம் அனுப்பி ரெட்டி சகோதரர்கள் கடத்தி சென்றுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இன்னும் 15 நாட்களுக்குள் அவர் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த சுரேஷ், கடத்தப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ‘ஆனந்த் சிங்' தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார் என்று பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இந்நிலையில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என பாஜக தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக ஸ்ரீராமலு அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் கொண்ட பெல்லாரி மாவட்டத்தின் விஜயநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்த் சிங்கை, காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற பரபரப்பு அடங்குவதற்குள், ராய்ச்சூர் மாவட்டம், மாஸ்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதாப் கவுடா பாட்டீல், என்ற காங்கிரல் எம்.எல்.ஏ.வும் மாயமாகியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பெயர் வெளியாகாத ஏதோ ஒரு இடத்திற்கு சென்றுள்ளதாகவும், இதற்கான ஏற்பாட்டை ரெட்டி சகோதரர்களில் ஒருவரான சோமசேகர ரெட்டி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த்சிங்கை பாஜக தலைமை மிரட்டி வைத்துள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளை கொண்டு மிரட்டி வைத்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் மாயமாகியுள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை அரங்கேற்றி உள்ளது.