பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்று ஒரு சில மணி நேரத்துக்குள், மாநில புலனாய்வுத் துறை அதிகாரியை பணியிட மாற்றம் செய்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.
கர்நாடக முதல்வராக பதவியேற்றதும், விவசாயிகள் பெற்ற ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆணையில் முதல் கையெழுத்திட்டார் எடியூரப்பா.
அதே வேகத்தில், மாநில அரசின் முக்கியப் பதவிகளை வகித்து வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதில், ஏடிஜிபியாக இருந்த அமர் குமார் பாண்டே புலனாய்வுத் துறை தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி டிஐஜி சந்தீப் பட்டீலும் புலனாய்வுத் துறை மாற்றப்பட்டார்.
வியாழக்கிழமை இந்த பணியிட மாறுதலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களது புதிய பதவியை ஏற்றுக் கொண்டனர்.
இது குறித்து தகவல்கள் கூறுவது என்னவென்றால், புலனாய்வுத் துறைத் தலைவராக இருந்த ஏ.எம். பிரசாத் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவராம். ஆனால், தற்போது அப்பதவியில் நியமிக்கப்பட்டிருப்போர் இருவருமே பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாம்.
இந்த வகையில், நேற்று ஒரே நாளில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளும், 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.