கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் மனு தாக்கல்
கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)-காங்கிரஸ் கூட்டணி அரசு புதன்கிழமை பதவியேற்றது. கர்நாடக மாநில மஜத தலைவர் ஹெச்.டி. குமாரசாமி முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
விதான் சௌதா வளாகத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெறுவோர் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார். அப்போது கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதர முக்கியத் தலைவர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, கர்நாடக சட்டப் பேரவையின் இடைக்காலத் தலைவராக வீராஜ்பேட்டை தொகுதி பாஜக எம்எல்ஏ கே.ஜி.போப்பையாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.