பூரி ஜகந்நாதர் கோவிலில் 'வரிசை' முறை தரிசனம் அறிமுகம்: கலவரம், வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு
உலகப்புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவிலில் 'வரிசை' முறை தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக கலவரம் மற்றும் வன்முறை வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூரி: உலகப்புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவிலில் 'வரிசை' முறை தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக கலவரம் மற்றும் வன்முறை வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் பூரியில் உள்ள ஜகந்நாதர் கோவில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. பக்தர்ககளுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகிறார்கள்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பூரி கோவிலில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் பக்தர்களுக்கு 'வரிசை' முறை தரிசனம் பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் கோவிலுக்கு உள்ளேயும் கம்பித்தடைகள் மூலமே பக்தர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு உள்ளூர் பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த முறையினை வெளியூர் பக்கதர்களுக்கு மட்டுமே அமல் செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த கோரிக்கையினை வலியுறுத்தி 'ஜகந்நாத் சேனா' என்னும் அமைப்பானது புதன்கிழமையன்று பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்தின் பொழுது பல்வேறு குழுக்கள் க்ராண்ட் சாலையில் அமைந்துள்ள பல்வேறு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
அத்துடன் போராட்ட குழுக்கள் ஜகந்நாதர் கோவில் நிர்வாக அலுவலகம், பூரி தொகுதி எம்.எல்.ஏவும், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான மஹேஸ்வர் மொஹந்தி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சர்தக் சாரங்கி ஆகியோரது இல்லங்களும் தாக்கப்பட்டன. நிலைமை கைமீறிச் சென்றதைத் தொடர்ந்து க்ராண்ட் சாலை பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஜகந்நாத் சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் படைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் தெரிவித்தார்.