சபரிமலை நடை திறப்பு: பத்தனம்திட்டாவில் 144 தடை உத்தரவு அமல்
பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் முதல்முறையாக திறக்கப்பட்டது.
இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட திருவாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
பத்தனம்திட்டாவில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.