காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீரைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. அவர்களின் மரணத்துக்கு இந்திய பாதுகாப்புப் படையினரே காரணம். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வர வேண்டும். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று அந்தச் சுட்டுரைப் பதிவில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் பிரச்னை குறித்து இம்ரான் கான் பேசுவது இது முதல் முறையல்ல.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான், இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகக் கூறினார். காஷ்மீர் பிரச்னை உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் முக்கிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அந்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புக் கொண்டது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு கடந்த செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டது. அதற்கு நடுவே, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு பாகிஸ்தான் கெளரவித்தது.
இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய இந்தியா, பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று கூறி, அந்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
அதன்பிறகு பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் தற்போது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.