முகப்பு
இந்தியா

ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது: மத்திய அரசு துறைகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய ஊழல்

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:17 AM
பகிர்:


முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவுறுத்தல்களை அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ளது.
அரசுத் துறைகள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ளன. அதைக் காரணம் காட்டி துறை ரீதியான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை.
இந்த விவகாரத்தை அண்மையில் ஆய்வு செய்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், இதுதொடர்பாக சில பரிந்துரைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கீழ் நிலையில் இருந்து உயர் நிலை வரை உள்ளவர்கள் வரை பலர் மீது லஞ்சப் புகார்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதுதொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் சிக்கல் என்னவெனில், பல தருணங்களில் அந்த வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை விரைவில் நிறைவடைவது இல்லை. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள், துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாவதில்லை.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை அலுவலகத்தில் அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மிகவும் தவறான நடைமுறை.
வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. 
எனவே, இரு தரப்பு விசாரணையும் ஒரே நேரத்தில நடைபெறுவதில் எந்த தவறும் இல்லை.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத போதிலும், துறை ரீதியான விசாரணையில் சம்பந்தப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.