நாட்டில் தீவிரமான நெருக்கடி நிலை அமலில் இருப்பதைப் போன்ற சூழல் நிலவி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மீண்டும் நிறுவச் செய்ய கருத்தொற்றுமை கொண்ட கட்சிகள் அனைத்தும் அடுத்த மக்களவைத் தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஜனநாயக தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) சில பதிவுகளை வெளியிட்டிருந்த மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படும் வேளையில், அது எனக்குள் பெரும் வேதனையைத்தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில், நமது நாட்டில் தற்போது கடுமையான அவசர நிலைக் காலம் அமலில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அதில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.