தேசத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக பணியாற்றுபவர்களை கெளரவிப்பதன் மூலமாக, மகாத்மா காந்தி காட்டிய பாதையை பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
நாடு முழுவதுமாக "தூய்மையே உண்மையான சேவை' என்ற பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில், அதுதொடர்பாக பழைய தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
"தூய்மையே உண்மையான சேவை' பிரசாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாகச் செயலாற்றிய 10 கோடி பேருடன் நேரடியாக உரையாடினார். மகாத்மா காந்தி காட்டிய பாதையை பின்பற்றும் பிரதமர் மோடி, தேசத்தை சுத்தமாக வைத்திருப்பதில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை அதன் மூலமாக கெளரவித்துள்ளார்.
தூய்மை நடவடிக்கையில் ஒவ்வொரு குடிமகனும் மாற்றத்தை நோக்கிய பொறுப்புக்காக உறுதியேற்கும் பட்சத்தில், ஒவ்வொருவரின் வீடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே தூய்மையடைந்துவிடும். அதன் பிறகு உலகளவில் இந்தியாவுக்கு கெளரவம் கிடைக்கும் என்று பியூஷ் கோயல் பேசினார்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில், "மிகப்பெரிய வலையமைப்பான இந்திய ரயில்வேயை சுத்தமாக வைத்திருப்பதில் அதன் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கது' என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.