முகப்பு
இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய ஊழல் - பிரஷாந்த் பூஷண்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய ஊழல் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய ஊழல் என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக, அவர் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், 

"இந்திய விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவை. அது 36 விமானங்களாக குறைக்கப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய ஊழல் மட்டும் கிடையாது. இதில், இந்திய பாதுகாப்பு கடுமையான சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் இந்திய விமானப் படையின் முதுகெலும்பை உடைத்து, மக்களின் பணத்தை சூறையாடி, பொதுத் துறை நிறுவனத்துக்கு (ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட்) களங்கம் ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பை கடுமையாக சமரசப்படுத்தியுள்ளீர்கள். 

அனில் அம்பானியின் பெரும்பாலான நிறுவனங்கள் கடனில் இருக்கும்போது, இந்த ஒப்பந்தத்தில் அவர் எப்படி இணைய முடியும். பாதுகாப்புத் துறை அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தில் அம்பானி நுழைய முடியாது.

அரசு உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் அங்கு சமர்பிக்க வேண்டும். பாதுகாப்புத் துறை கொள்முதலின் மிகப் பெரிய ஊழலை மறைக்கவே மத்திய அரசு விரும்புகிறது. மற்றபடி இதில் அவர்கள் கூறும்படி தேசிய பாதுகாப்பு என்று எதுவும் கிடையாது" என்றார்.  

இவர் ஏற்கனவே, "இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்படி விமானப் படை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.