பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தின் காரணமாக ஒரே நாளில் 12 நோயாளிகள் மரணமடைந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் இளநிலை மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவரின் உறவினர் ஞாயிறன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவர்கள் திங்கள் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை தற்போது செவிலியர்கள் மற்றும் துணை நிலை மருத்துவ பணியாளர்களே கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு பணிநேரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இம்முறை அரசின் வெறும் உறுதி மட்டும் தங்களுக்கு போதுமனதில்லை என்றுஅவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தின் காரணமாக, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 12 நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.