அரசியலில் கிரிமினல்கள் நுழைவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதற்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதற்காக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்.
அதேநேரத்தில், இந்த நோக்கத்துக்காக சட்டம் கொண்டு வந்தால், பாஜகவுக்கு இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 282இல் இருந்து 182ஆக குறைந்துவிடும். ஆதலால், இத்தகைய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருமா? என்பது சந்தேகம்தான்.
உதாரணமாக, லோக்பால் விவகாரத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் சட்டத்தை கொண்டு வரவில்லை என்றார் கபில் சிபல்.
பாஜக கருத்து: தில்லியில் செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில், உச்ச நீதிமன்றம் நமது நாட்டின் மிகவும் உயரிய நீதிமன்றம் ஆகும்; அதனால் உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பு அளித்தாலும், அதை பாஜக மதிக்கிறது என்றார்.