முகப்பு
இந்தியா

மேஜையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பச்சிளம் சிசு: மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் 

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் சிசு ஒன்று மேஜையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. 

Updated On : 26 செப்டம்பர் 2018, 3:41 pm IST
பகிர்:

பைசாபாத்: உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் சிசு ஒன்று மேஜையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்தவர் பானு பிரதாப். அவரது மனைவி சங்கீதா. நிறைமாத கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக பைசாபாத் அரசு மகளிர் மருத்துவமனையில் செவ்வாயன்று சேர்த்துளளார். அங்கு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்தவுடன் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பானு பிரதாப்பிடம்  பணம் கேட்டுள்ளார்கள். அவரால் அதை தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது மனைவியையம் குழந்தையையும் யாரும் கவனிக்காமல் விட்டுச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பச்சிளம் சிசு மேஜையில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் அளித்துள்ள புகாரில் பானு பிரதாப் கூறியதாவது:

குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கேட்ட பணத்தினைத் தர இயலாத காரணத்தால், எனது மனைவியையம் குழந்தையையும் யாரும் கவனிக்காமல் விட்டுச் சென்றதால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மருத்துவனையில் சேர்க்கும் போது எனது மனைவியின் உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. அதன் பின்புதான் மோசமானது.  உடனே அப்போது பணியில் இருந்த மருத்துவர் ப்ரியங்காவை அணுகினேன். அவர்தான் எனது மனைவியை மருத்துவர்கள் இல்லாத பணியில் இருந்தவர்களிடம் ஒப்படைத்தார். இந்த பணியாளர்கள்தான் குழந்தையை ஆபரேசன் மேஜையில் இருந்து தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளனர். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளர் சுக்லா கூறியதாவது:

குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர்கள் அனைவரும் எனது அறையில் அவர்களது கோரிக்கைகள்  தொடர்பாக என்னுடன் விவாதித்துக் கொண்டிருந்த காரணத்தால், மகப்பேறு பிரிவில் யாரும் இல்லை. நான் கூறிய பிறகும் பணிக்குத் திரும்பாத மருத்துவர்கள் மற்றும் செவியலர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்,. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.