மாநில கட்சிகளுக்கு தேசிய கட்சிகளுடன் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம்: தேவே கௌடா
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என முன்னாள் பிரதமர் தேவே கௌடா தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என முன்னாள் பிரதமர் தேவே கௌடா தெரிவித்தார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில்,
பிரதமர் மோடி தொடர்பாக பல சமூக வலைதளப் பக்கங்களும், ஊடகங்களும் விளம்பரப்படுத்தி வருகிறது. அதிலும், அவரை ஒரு உலக தலைவர் அளவுக்கு புகழாரம் சூட்டுகிறது. அவரை போன்ற தலைவர் வேறெங்கும் இல்லை என்றெல்லாம் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இதிலுள்ள போலித்தன்மையை நமது இளைஞர்கள் புரிந்துகொள்வர்.
130 கோடி மக்களின் மனங்களை முன்கூட்டியே அறிவது சாத்தியமற்றது. எனவே அடுத்த தேர்தலின் முடிவில் மோடி எந்தப் பக்கம் இருப்பார் (பிரதமர் அல்லது எதிர்கட்சித் தலைவர்) என்பது யாருக்கும் தெரியாது. அதை இந்த 130 கோடி மக்கள் தான் முடிவு செய்வார்கள். நானும் உங்களின் ஆசியுடன் நாடாளுமன்றம் செல்ல விரும்புகிறேன்.
Advertisement
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில கட்சிகளுக்கு தேசிய கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால், மஜத மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது.
எங்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டுவிடும். கர்நாடகத்தில் பாஜக-வை நாங்கள் இருவரும் இணைந்து எதிர்ப்பது மிக அவசியம். அப்போதுதான் கர்நாடகத்தில் பாஜக-வின் பலம் குறையும் என்றார்.