தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹத்ரா எனுமிடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தில்லியின் கட்டமைப்பும், மக்களின் வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தில்லியில் ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்களவைத் தேர்தலிலும் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் அடுத்து யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த 7 எம்.பி.க்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அவர்கள் நம்மிடம் ஆதரவு கேட்டு வருவார்கள். அப்போது தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் உடன் ஆம்ஆத்மி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே இந்த தேர்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.