தவறாக பாஜகவுக்கு வாக்களித்ததால் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட தலித் இளைஞர்
உத்தரப்பிரதேசத்தில் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்துவிட்ட காரணத்தால், மை வைத்த விரலை துண்டித்துக் கொண்டார் ஒரு தலித் இளைஞர்.
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்துவிட்ட காரணத்தால், மை வைத்த விரலை துண்டித்துக் கொண்டார் ஒரு தலித் இளைஞர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்துக்கு அருகருகே தாமரை சின்னம் இருந்ததாலும், ஒரே மாதிரியான சின்னங்கள் இருந்ததாலும் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததை உணர்ந்த இளைஞர் செய்வறியாது தவித்தார். வீட்டுக்கு வந்தும் மனம் பதைபதைக்க, தன் விரலில் இட்டிருந்த மை அவரை பாடுபடுத்தியது.
உடனடியாக ஒரு கத்தியை எடுத்து தனது விரலை வெட்டிக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
நான் தலித் என்பதால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிப்பது எனது கடமை. ஆனால் தவறுதலாக தாமரைச் சின்னத்தில் வாக்களித்துவிட்டேன். அது என்னை உறுத்தியதால் இப்படி செய்துவிட்டேன் என்றார் அப்பாவியாக.
இவரது விடியோதான் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.