"தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குகளுக்காக மட்டுமே அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி, அவரது பெயரை அவமரியாதை செய்கிறார் மாயாவதி' என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் பேசியதாவது: அரசியல் என்பது எவ்வளவு தாழ்ந்து விட்டது என்பதை நீங்களே (மக்களே) பாருங்கள். மாயாவதி இன்று நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அம்பேத்கரின் பெயரை அவமதிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளார். நம் இந்திய தேசத்தை மதிக்காதவர்களுக்கு, அளிக்கப்படும் வாக்குகளுக்கு மதிப்பு இருக்காது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முன்பு உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகளின் அரசுகள், நிதி இருப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி ஏழை எளிய மக்களுக்கு புதிதாக வீடுகளை கட்டித் தரவில்லை. விவசாயிகள் பிரச்னைகளையும் கண்டுக்கொள்ளாமல், அவர்களுக்கு போய் சேர வேண்டிய நிதியையும் ஊழல் புரிந்து அபகரித்துக் கொண்டு அவர்களின் கோபத்துக்கு ஆளானார்கள்.
ஆனால், மாநிலத்தை ஆளும் பாஜக அரசுதான், அவர்களின் பெயரால் வங்கிக் கணக்கை தொடங்கி வைத்து, அவர்களுக்கு ஜாதி, மதம் என்ற வித்தியாசம் இன்றி வளர்ச்சித் திட்டங்களை அள்ளித் தருகிறது. "ஒன்றாக அனைவருக்கும்- வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும்' என்பதன் அடிப்படையில் பிரதமர் மோடி பணிபுரிந்து வருகிறார் என்று அவர் பேசினார்.