மூத்த அரசியல்வாதி மறைந்த என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியைக் கொன்றதாக அவரது மனைவியும் வழக்குரைஞருமான அபூர்வா சுக்லாவை தில்லி காவல் துறையினர்புதன்கிழமை கைது செய்தனர்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு காரணமாக இக்கொலையை அவர் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முதுபெரும் அரசியல்வாதி மறைந்த என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரி. அவர், கடந்த 15-ஆம் தேதி இரவுக்கும் 16-ஆம் தேதி அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவரது டிஃபன்ஸ் காலனியில் உள்ள குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் செய்து வரும் அவரது மனைவி அபூர்வா சுக்லா மற்றும் வீட்டுப் பணியாளர் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, திவாரி மூச்சுத் திறணறடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சம்பவத்தன்று இரவு ரோஹித் சேகர் திவாரி, அவரது மனைவி அபூர்வா சுக்லா இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. மேலும், உத்தரக்கண்ட் மாநிலத்தில் இருந்து தில்லிக்கு நேரடியாக வந்த ரோஹித் சேகர் திவாரி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது போதை மயக்கத்தில் இருந்த அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அந்தச் சமயத்தில் அவரைத் தாக்கி, மூச்சை திணறடித்து அபூர்வா சுக்லா கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், திருமணமானதில் இருந்தே இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தவில்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை இருந்து வந்தது. தற்போது அபூர்வா சுக்லா அளித்துள்ள வாக்குமூலத்தின்படி அவர் திட்டமிட்டு இக்கொலையை செய்திருக்கவில்லை என்பதும் சந்தர்ப்பசூழலால் இது நடந்திருப்பதும் தெரிய வருகிறது.