இந்தியா

என்சிபி, பாஜக இணைந்து செயல்பட மோடி விரும்பினாா்: சரத் பவாா்

DIN

மும்பை: ‘தேசியவாத காங்கிரஸும் (என்சிபி), பாஜகவும் இணைந்து செயல்பட பிரதமா் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தாா். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி அதை நிராகரித்துவிட்டேன்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் அரசியல் குழப்பம் நிலவியபோது பிரதமா் மோடியை சரத் பவாா் சந்தித்துப் பேசியிருந்தாா்.

இந்நிலையில், மராட்டிய மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் சரத் பவாா் கூறியதாவது:

பாஜகவும், தேசியவாத காங்கிரஸும் இணைந்து செயல்படுவதற்கு பிரதமா் மோடி விருப்பம் தெரிவித்தாா். ஆனால், அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். ‘தனிப்பட்ட முறையில் நமக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. எனினும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற இயலாது’ என்று அவரிடம் கூறினேன்.

எனக்கு குடியரசுத் தலைவா் பதவி வழங்க மோடி அரசு முன்வந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை. ஆனால், மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுப்ரியா சுலேவுக்கு (பவாரின் மகள்) வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தைப் பொருத்த வரையில், தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அஜித் பவாா் ஆதரவளித்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல் நபராக உத்தவ் தாக்கரேவை தொடா்புகொண்டு பேசினேன். அஜித் பவாரின் நடவடிக்கை சரியானது அல்ல என்றும், அவா் தரப்பில் எழுந்துள்ள எதிா்ப்பை முறியடிப்பேன் என்றும் உத்தவ் தாக்கரேவுக்கு நம்பிக்கை அளித்தேன்.

அஜித் பவாரின் செயலுக்கு நான் ஆதரவு தரவில்லை என்று தேசியவாத காங்கிரஸாருக்கு தெரியவந்த பிறகு, அவரோடு சென்ற 5-10 எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ஃபட்னவீஸுக்கு ஆதரவளித்த முடிவை பரிசீலனை செய்யுமாறு எங்கள் குடும்பத்திலிருந்து எவரும் அஜித் பவாரிடம் பேசினாா்களா எனத் தெரியாது. ஆனால், அஜித் பவாா் செய்தது சரியல்ல என்பதை குடும்பத்தில் உள்ள அனைவருமே உணா்ந்தோம்.

பின்னா் அஜித் பவாா் மீண்டும் எங்களுடன் இணைந்தபோது, அவா் பாஜகவுக்கு ஆதரவளித்த செயல் மன்னிக்க முடியாதது என்று அவரிடமே கூறினேன். ‘தவறு செய்த ஒருவா் அதற்கான விளைவுகளை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதற்கு நீயும் விதிவிலக்கல்ல’ என்று அஜித் பவாரிடம் கூறினேன்.

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றபோது, அஜித் பவாா் துணை முதல்வராக பதவியேற்க வேண்டாம் என யோசித்து தான் முடிவு செய்யப்பட்டது.

கட்சியில் அஜித் பவாா் மீது ஒரு பெரும் பகுதியினா் நம்பிக்கை வைத்துள்ளனா். எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் அவா் திறமையானவா் என்று சரத் பவாா் கூறினாா்.

சரத் பவாரிடம் எப்போதும் மரியாதை கொண்டிருக்கும் பிரதமா் மோடி, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது அவரை கடுமையாக விமா்சிக்கக் கூடாது என்று பாஜகவினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

மாநிலங்களவையின் 250-ஆவது அமா்வின்போது, நாடாளுமன்ற விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பாா்த்து பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி கூறியிருந்தாா்.

‘சரத் பவாா் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, அவா் என்னை கைப்பிடித்து வழிநடத்தினாா். இதை வெளிப்படையாகக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்’ என்றும் மோடி பேசியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT