கசப்பான உண்மை: பலாத்காரங்களின் தலைநகராக மாறியிருக்கும் உன்னாவ்
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 86 பலாத்கார வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பலாத்காரங்களின் தலைநகராக மாறியிருக்கிறது.
உன்னாவ்: கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 86 பலாத்கார வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பலாத்காரங்களின் தலைநகராக மாறியிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இருந்து 63 கி.மீ. தொலைவிலும், கான்பூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது உன்னாவ். இங்கு 31 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
இங்கு பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டுமல்லாமல், இதே காலக்கட்டத்தில் 185 பாலியல் சீண்டல்கள் தொடர்பான பெண்களின் குற்றச்சாட்டுகளும் பதிவாகியிருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதில், பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் செங்கார் மற்றும் வியாழக்கிழமை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்களே தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்குகள் நாட்டையே உலுக்கிய சம்பவங்களாக அமைந்துவிட்டன.
பதிவான பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒன்று கைது செய்யப்பட்டு உடனடியாக பெயிலில் விடுதலையாவார்கள் அல்லது தலைமறைவாக இருப்பதாக பதிவு செய்யப்படுவதுதான் வழக்கம். பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே காவல்துறை செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
உன்னாவ் காவல்துறை முற்றிலும் சீர்கெட்டு உள்ளது. அவர்களது அரசியல் தலைவர்கள் அனுமதி அளிக்காமல், ஒரு இன்ச் கூட அவர்கள் அசைய மாட்டார்கள். இதனால்தான் குற்றவாளிகள் எந்த பயமும் இல்லாமல் குற்றங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த ராகவ் ராம் ஷுக்லா என்பவர்.
மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கு நடக்கும் அனைத்துக் குற்றங்களையும் அவர்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குற்றவாளிகளுக்கு எதிராக எடுத்த கடும் நடவடிக்கை இது என்று ஏதாவது ஒரே ஒரு சம்பவத்தை காவல்துறையினரால் கூற முடியுமா? என்றும் பொதுமக்களே சவால் விடுகிறார்கள்.
குல்தீப் செங்கார் விவகாரத்தில் கூட, குற்றம் நடந்து 9 மாதங்கள் வரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. அப்போதும் புகார் கொடுத்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு அவரை குற்றவாளிகள் தரையில் இழுத்துச் சென்றனர். அவரும் இறந்துவிட்டார். இங்கு புகார் கொடுப்பவர்களுக்கு எதிராகவே குற்றங்கள் நடக்கின்றன. வியாழக்கிழமை கூட, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயிலில் வந்த பிறகும், புகார் கொடுத்த பெண்ணின் பாதுகாப்பு குறித்து காவல்துறை கவலைப்படவே இல்லை. இன்று அவர் எரித்துக் கொல்லப்பட்டுவிட்டார் என்று புலம்புகிறார்கள் மக்கள்.