மோடி அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம்தான் இது: சோனியா காந்தி!
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையே மூர்க்கத்தனமான மோடி அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையே மூர்க்கத்தனமான மோடி அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்ட போராட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வன்முறையில் முடிந்தது. ஆனால், ஜாமியா மாணவர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த தில்லி போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாக சமூக வலைதளங்களில் விடியோக்கள் வெளியானது.
அதேசமயம், போலீஸ் தரப்பில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜாமியா பல்கலைக்கழகத்தில் தில்லி போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"மோடி அரசே வன்முறை மற்றும் பிரிவினையின் தாயாக மாறியுள்ளது. இது நாட்டை வெறுப்பின் இருண்ட குழிக்குள் தள்ளி, இளைஞர்களின் எதிர்காலத்தை உலையில் வைத்து எரித்துள்ளது. அரசியல் லாபத்துக்காக மத வெறிச் சூழலை உருவாக்கி இளைஞர்களின் உரிமையைப் பறித்து, வன்முறை மூலம் நாட்டில் நிலையற்றத் தன்மையை உருவாக்க மத்திய அரசு நினைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் இதற்கான மூலக்காரணம்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையே மூர்க்கத்தனமான மோடி அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம். இளைஞர்கள் மற்றும் மாணவ சக்திகள் எழுச்சி பெற்றால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.