இந்தியா அளித்த ஆதாரங்களை வைத்து பயங்கரவாதிகள் மீது இதுவரை பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய இம்ரான் கான், இது தொடர்பாக இந்தியா தகுந்த ஆதாரங்களை அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஏரோ இந்தியா - 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதல் குறித்து இப்போதைய மத்திய அரசு மட்டுமல்ல, இதற்கு முந்தைய அரசும் பாகிஸ்தானிடம் உரிய ஆதாரங்களை அளித்துள்ளன. ஆனால், இதுவரை அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். பாகிஸ்தானில் நீதிமன்றங்கள் கூட தங்கள் பணிகளைச் சரியாகச் செய்வது இல்லை. அப்படி இருக்கும்போது அவர்களிடம் நாம் ஆதாரம் அளித்தாலும் அது வீணாகவே போகிறது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு நாம் எப்படி பதிலடி தரப்போகிறோம் என்பதை நான் கூறவிரும்பவில்லை. எந்த நேரத்தில், எப்படி பதிலடி அளிக்க வேண்டும் என்பதை ராணுவத்தின் வசம் அளித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறிவிட்டார். புல்வாமா போன்ற பயங்கரவாதத் தாக்குதல் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் நமது பாதுகாப்பு அமைப்புகள் முழுமுனைப்புடன் செயல்பட்டு வருகின்றன என்றார் நிர்மலா சீதாராமன்.