அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக்கூடமாக இந்தியா திகழ்வதாக,அமெரிக்க நிபுணரும், உலக வங்கியின் ஆலோசகருமான ஜார்ஜியா பெட்கோஸ்கி கருத்து தெரிவித்தார்.
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் ஹூஸ்டன் இந்திய மாநாடு சார்பில் வணிகக்குழு உறுப்பினர் மாநாடு ஹூஸ்டனில் நடைபெற்றது.
இதில் இந்திய-அமெரிக்கா நாடுகளிடையே பல்வேறு தொழில் துறைகளில் அளவில்லா முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான வாய்ப்புகள் குறித்தும், டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் இ-வர்த்தகம் போன்றவற்றின் மூலமாக வணிகம் மேற்கொள்வதன் மூலம் இருநாடுகளிடையே வணிகத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற உலக வங்கியின் ஆலோசகரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான ஜார்ஜியா பெட்கோஸ்கி பேசியதாவது:
பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதுடன், புதுமையான தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் சோதனைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. உலகமயமாக்குதல் மூலம் வளரும் பொருளாதாரத்தையும், வணிகத்தையும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார அடிப்படை மிகவும் வலுவானது. அதன் வளர்ச்சிப்பாதையை மேலும் உயர்த்துவதே சவாலாக உள்ளது என்றார்.
ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறுகையில், இந்திய- அமெரிக்கா இடையிலான வணிகத் தொடர்புகளில் ஹூஸ்டன் நகரம் 4ஆவது இடத்தை பெற்றுள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து ஹூஸ்டன் நகரத்திற்கு நேரடி விமானப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.