ஷில்லாங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்கும் பணியின் முதல் கட்டமாக, ஒரு தொழிலாளியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
மேகாலயாவின் கிழக்கு ஜெய்டியா மலைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் கடந்த டிசம்பர் 13ம் தேதி 15 தொழிலாளர்கள் வழக்கம் போல பணிக்குச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததால், சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர்.
அவர்களை மீட்குப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று, தற்போதுதான் ஒரே ஒரு தொழிலாளியின் உடல் மிக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களைத் தேடும் பணி அதே ஆமை வேகத்தில் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
சுரங்கத்துக்குள் தொழிலாளிகள் சிக்கி சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஒரு தொழிலாளியின் உடல் மட்டும் மீட்கப்பட்டிருப்பது, எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தும் அதனால் எந்த சாமானியனுக்கு பயனில்லை என்பதையே உணர்த்துவதாக தொழிலாளர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
நம்முடைய வேதனையும் அதுவாகவே உள்ளது.