கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கோருங்கள் என்று தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றது. இது திரிணமூல் காங்கிரஸைவிட 4 தொகுதிகள்தான் குறைவாகும். அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களை இழந்தது. இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை தனது கட்சி எம்எல்ஏகள் கூட்டத்தை மம்தா பானர்ஜி நடத்தினார். அப்போது, அவர் பேசியது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
2021-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் அமோக வெற்றி பெறும் அளவுக்கு கட்சியினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக பொதுமக்களிடம் எம்எல்ஏக்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார் என்றார்.