தலித் மற்றும் பழங்குடியினர் பொருளாதார ரீதியில் முன்னேறுவதை தடுக்கவே மத்திய அரசு வருமானவரித்துறை கொண்டு சோதனை நடத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இதுகுறித்து மாயாவதி கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வால் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்படும் சதிச்செயல். இந்நாட்டிலேயே சாதியவாத கட்சி என்றால் அது பாஜக தான். ஏனென்றால் அவர்களுக்கு பிற்பட்ட சமூகத்தினரின் வளர்ச்சி அறவே பிடிக்காது. அதிலும் பகுஜன் சமாஜ் கட்சி தான் ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடி வருகிறது.
தலித் மற்றும் பழங்குடியினர் பொருளாதார ரீதியில் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை. அவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தடுக்கவே இதுபோன்ற வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளை நடத்தி மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
மக்களவைத் தேர்தலின் போது பாஜக வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது எப்படி என்ற குறிப்பை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. அதன்மூலம் தான் மக்களின் வாக்குகளை அவர்கள் விலைகொடுத்து வாங்கினார்கள்.
எங்களை எதிர்த்து எத்தனை சதிச்செயல்களில் ஈடுபட்டாலும் அதை நாங்கள் துணிவுடன் எதிர்கொள்வோம் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எச்சரிக்கிறேன் என்றார்.
முன்னதாக, தனது சகோதரரும், கட்சியின் துணைத் தலைவருமான ஆனந்த் குமார், மனைவி விசிதிர் லதா ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது நொய்டாவில் ரூ.400 கோடி மதிப்புடைய 7 ஏக்கர் நிலங்களின் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் தில்லி மற்றும் நொய்டாவில் 18 நிறுவனங்களில் முதலீடு செய்து இவர்கள் தலைவர்களாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.