தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த ராகவேந்திர சிங் சௌஹான், அதே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தெலங்கானா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்ட ராகவேந்திர சிங் சௌஹான், தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய வெ. இராமசுப்பிரமணியன், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 24 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 12 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 13 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 9 நீதிபதிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.