பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடி புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு கொண்டு வர விமான ஆம்புலன்ஸ் வழங்கத் தயாராக இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கரீபியன் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் தற்போது வசித்து வரும் சோக்ஸி, அண்மையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தான் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவே வெளிநாட்டுக்குச் சென்றதாகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்புவதற்காக வெளியேறவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தற்போது பயணம் செய்யத் தகுதியான நிலையில் இருப்பதால் இந்தியா திரும்புவதற்குத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினரால் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுத்தாக்கலில் தெரிவித்திருப்பதாவது: சோக்ஸியிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம். சோக்ஸியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர, நிபுணர் கொண்ட மருத்துவக்குழுவுடன் கூடிய விமான ஆம்புலன்ûஸ ஏற்பாடு செய்துத் தர தயாராக இருக்கிறோம். தலைசிறந்த மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் இந்தியாவில் கிடைப்பதால் இந்த ஏற்பாட்டினை செய்துத் தர தயாராக இருப்பதாக அமலாக்கத்துறை மும்பை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடிக்கு மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியதால், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து
தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவித்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறது.