மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி காலமானதையடுத்து, மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்பு உறுப்பினர் ஒருவர் காலமானால், நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டு பாதி நேரம் வரை மட்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி (75), திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் நுரையீரல் நோய்த்தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாநிலங்களவை திங்கள்கிழமை தொடங்கியதும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
மாநிலங்களவை உறுப்பினரும், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவருமான மதன் லால் சைனி காலமாகிவிட்டார். வழக்குரைஞரான அவர் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது மறைவால் நமது நாடு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துவிட்டது. சிறந்த சமூக சேவகரான அவர், தேசப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வந்தார் என்றார். இதையடுத்து, அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.