ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பண் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
ராம்பண் மாவட்டத்தின் சாதெர்கோடு பகுதியில் இருந்து ராஜ்கர் நோக்கி சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த வாகனம், பக்லிகர் பகுதி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அதையடுத்து விபத்தை நேரில் கண்டவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உள்ளூர் மக்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 மாத குழந்தை உள்பட 5 குழந்தைகள் உயிரிழந்தனர். வாகனத்தின் ஓட்டுநர் உள்பட 4 பேர் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மலைப்பாதைகளில் அந்த ரக வாகனத்தில் 7 பேரை மட்டும்தான் ஏற்றிச் செல்ல வேண்டும். விதிகளைமீறி 15 பேரை ஓட்டுநர் ஏற்றியுள்ளார் என்று கூறினார்.
ராம்பண் மாவட்டத்தின் தொலைதூர பகுதியான ராஜ்கரை இணைக்கும் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில், 9 பேர் காயமடைந்தனர்.