முதலீட்டாளர்களிடமிருந்து கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவழி இளைஞரை அமெரிக்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் ரமேஷ் கிரிஷ் நாதன் (37). இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். ரமேஷ் புதுவிதமான திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகையை திரட்டியுள்ளார். குறிப்பாக, விண்கலம் உள்ளிட்ட விண்வெளி தொடர்பான உபகரணங்களை தயாரிப்பதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். திரட்டப்பட்ட தொகைய தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
இதனை அறிந்த முதலீட்டாளர்கள் புகார் கொடுத்ததையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் போலீஸார் கடந்த வாரம் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது, மோசடி முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தியது, பண மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரமேஷ் மீதான முதலீட்டு மோசடி குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். அதேபோன்று பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.