100 வருடங்கள் ஆட்சி செய்தாலும் ஜம்மு-காஷ்மீரின் 370 சிறப்பு சட்டப்பிரிவை பாஜக நீக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை தான் இந்த தேர்தலின் முக்கிய பிரசாரமாக இருந்தது. ஆனால், அவற்றில் இருந்து திசை திருப்பவே மசூத் அஸார் விவகாரங்கள் பாஜக-வால் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அவர்களுடைய கடந்தகால ஆட்சியில் தான் மசூத் அஸார் விடுவிக்கப்பட்டார் என்பது முக்கியமானதாக இல்லை.
காங்கிரஸ் கட்சி இம்முறை சுமார் 273-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாட்டின் மிகப்பெரிய கட்சியின மிகப்பெரிய தலைவராக ராகுல் திகழ்கிறார். எனவே பிரதமர் பதவிக்கு அவர் தான் சரியானவர்.
பாஜக தொடர்ந்து 100 வருடங்களுக்கு ஆட்சி செய்தாலும் ஜம்மு-காஷ்மீரின் 370 சிறப்பு சட்டப்பிரிவை நீக்காது என்று என்னால் உறுதியாக கூற முடியும். ஏனென்றால் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோதே பாஜக இதை செய்யவில்லை என்று விமர்சித்தார்.