கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
அண்மைக் காலமாக கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிலர் பேசியும், கருத்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர். இதுபோன்று யார் பேசினாலும், அதனை ஏற்க முடியாது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இளைஞர்கள் 18 வயதில் வாக்களிக்க வலியுறுத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். ஆனால், இளைஞர்களைத் திசை திருப்பி, அவர்களை தனது சுயலாபத்துக்காக பிரதமர் மோடி பயன்படுத்திக் கொள்கிறார்.
ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினரை தரக்குறைவாக விமர்சிக்கும் பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள், சாதனைகளை மக்களிடம் கூற வேண்டும். அதை விடுத்து, எதிர்க்கட்சிகளைக் குறை கூறி, தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுவது முறையல்ல என்றார்.