விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளின் தேவை போலியாக இருக்கிறது என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்திய விமான நிலையங்களில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் செல்வதற்காக சக்கர நாற்காலிகள் வழங்கப்படும். இதற்காகப் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே எத்தனை சக்கர நாற்காலிகள் வேண்டும் என்று முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளின் தேவை போலியாக இருக்கிறது என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவு செய்த ட்வீட்டில், 'இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்கள் மற்றும் இந்தியாவுக்கு வரும் விமானங்களில் உள்ள பயணிகள் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.. 1) மற்றவர்களை விட வயதான இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களா? 2) இந்தியாவில் பலவீனமான மக்கள் அதிகம் இருக்கிறார்களா? 3) நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் செய்கிறார்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அவரை பின்தொடர்பவர்கள் பலர் பதில் அளித்து வருகின்றனர். சக்கர நாற்காலிகள் போலியாகக் பயன்படுத்தப்படுகின்றனவா? என்று சிலர் ஆச்சரியத்துடன் கேட்க, சிலர் இதுவும் முறைகேடு தான் என்று பதில் அளித்துள்ளனர்.
ஒரு டீவீட்டில், 'இவர்களில் பெரும்பாலோர் மேற்குப் பகுதியில் குடியேறியவர்கள். இவர்கள் தொடர்ந்து விமான நிலையங்களுக்குச் செல்வது வழக்கமாகி விட்டது. எனவே, வசதி கருதி அவர்களுடைய குழந்தைகளுக்கு சக்கர நாற்காலியை பழக்குகின்றனர். எனவே குழந்தைகள் தொடர்ந்து சக்கர நாற்காலியை கேட்கின்றனர். மேலும், விமான நிறுவனங்களுக்கு இதுவும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பு' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், 'எனது தந்தைக்கு 83 வயது. அவர் என்னையும் ஹைதராபாத், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள எனது சகோதர்களைப் பார்க்க வருடத்திற்கு மூன்று முறை விமானத்தில் பயணிக்கிறார். அவருக்கு நாள்பட்ட மூட்டுவலி உள்ளது மற்றும் சில மாதங்களுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. சக்கர நாற்காலி இருப்பதால் தான் அவர் விமானத்தில் பயணிக்கிறார்' என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட், சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.