பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை மதியம் 12:30 மணியளவில் சந்தித்துப் பேசினார். அப்போது மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் பிரதமர் மோடியிடம் இதுதொடர்பான மனுவை அளித்தார். அதில்,
மகாராஷ்டிரத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 2 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேத மதிப்பீட்டை சேகரித்துள்ளேன். விரைவில் முழு விவரத்தையும் உங்களுக்கு (பிரதமர் மோடி) அனுப்பி வைக்கிறேன்.
மகாராஷ்டிரத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதால், விவசாயிகள் பிரச்னையில் பிரதமரின் தலையீடு அவசியமாகிறது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக பூர்த்தி செய்யும் நிலையில், பிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.