முத்தூட் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் 55 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் ஹஜிபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளையில் சனிக்கிழமை பட்டப்பகலில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 மர்ம நபர்கள் 55 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக வைஷாலி காவல்நிலைய எஸ்.பி. எம்.கே.சௌதாரி கூறுகையில்,
ஹஜிபூர் மாவட்டத்தில் உள்ள முத்தூட் நிதி நிறுவனக் கிளையில் பட்டப்பகலில் சுமார் 12:30 மணியளவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 முதல் 7 பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் அந்த கிளையின் மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி 55 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.