இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஹிஸ்புல் முஜாஹுதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியாஸ் நைகூ எனும் பயங்கரவாத தலைவனின் நெருங்கிய கூட்டாளியான நைரா, 2016 முதல் 'ஏ' பிரிவு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன். அதுபோன்று இர்ஃபான் எனும் மற்றொரு பயங்கரவாதி 2017 முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இவர்கள் இருவரும் ராணுவம், பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மீது தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.