தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க அக்கட்சிக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதியை தேவேந்திர சிங் ராணா, ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் பெற்றார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மனைவி மாலி அப்துல்லாவைச் சந்திக்க அக்கட்சியின் ஜம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் ஒரு குழு ஸ்ரீநகரில் உள்ள அவது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர சிங் ராணா கூறுகையில், ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மனைவி மாலி அப்துல்லா ஆகியோர் உயர்ந்த மனநிலையுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும் இங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் அவர்களுக்கு சிறிது கவலையும் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அரசியல் நிகழ்வுகள் தொடர வேண்டுமானால் முக்கியத் தலைவர்களை விடுவிக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.