உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வாத்ரா, முன்னதாக தேர்தலின்போது மட்டுமே கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். மற்றபடி, தேர்தல்களில் போட்டியிடுவதோ அல்லது கட்சியின் முக்கியப் பதவிகளில் இருந்ததோ கிடையாது.
இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது முதல்முறையாக ப்ரியங்கா காந்திக்கு உ.பி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ப்ரியங்கா காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு கடன் தள்ளுபடி என்ற பெயரில் மாநிலத்தில் கடனில் தவிக்கும் விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், அதிக மழை காரணமாக ஏற்பட்ட பயிர் இழப்புக்கு விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 'இந்த அரசு விவசாயிகளை பல வழிகளில் துன்புறுத்தி வருகிறது. கடன் தள்ளுபடி என்ற பெயரில் அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி மின்சாரக் கட்டணங்கள் என்ற பெயரில் அவர்களை சிறைகளில் தள்ளியது. வெள்ளம் மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. பாஜக அரசு இங்கு விளம்பரங்களில் மட்டுமே விவசாயிகளை நினைவில் வைத்துக்கொள்கிறது' என்று ப்ரியங்கா காந்தி ட்வீட்செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.