ஜம்மு: காஷ்மீர் எல்லைப்பகுதியில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ஞாயிறன்று தீபாவளி கொண்டாடினார்.
குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் தனிமையில் நாட்டைக் காக்கும் பணியில் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இதை வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு செய்கையாகவே அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
அந்த வகையில் ஞாயிறன்று ஜம்முகாஷ்மீர் எல்லைப்பகுதியான ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நாட்டிற்காக சேவை செய்துவரும் அவர்களை இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களுக்காக அரசு செய்து வரும் விஷயங்களை எடுத்துரைத்த அவர், பேரிடர் காலங்களில் ராணுவ வீரர்களின் விரைவான சேவையையும் பாராட்டியுள்ளார்.
அங்கிருந்து திரும்பும் வழியில் பதான்கோட் விமான தளத்தில் விமானப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடியதையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.