புது தில்லி: 'தூய்மை இந்தியா' திட்ட அமலாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க மென்பொருள் வணிக தொழிலதிபர் பில்கேட்ஸின் அறக்கட்டளை விருது கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமராக 2014-ம் ஆண்டு முதன்முறை மோடி பதவியேற்றார். அந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’(ஸ்வாச் பாரத்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டத்தின்படி பொது இடங்களில் மக்கள் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அநாகரிகமான பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களின் வீடுகளில் 5 ஆண்டுகளில் 6 கோடி கழிப்பறைகளை கட்டித்தருவது இந்த ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டமானது வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதிக்குள் தனது இலக்கை நிறைவு செய்யும் வகையில் செயல்திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'தூய்மை இந்தியா' திட்ட அமலாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க மென்பொருள் வணிக தொழிலதிபர் பில்கேட்ஸின் அறக்கட்டளை விருது கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கேட்ஸ் - மெலின்டா அறக்கட்டளை’ மூலம் உலகெங்கும் பல்வேறு பொதுச்சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையின் சார்பில் உயரிய விருது வழங்கப்படவுள்ள தகவலை பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜித்தேந்திரா சிங் திங்களன்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அந்த சமயத்தில் மோடிக்கு விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.