நாக்பூர்: உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துது.
விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், சனிக்கிழமை அதிகாலை தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது
அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ சனிக்கிழமை மாலை உறுதிபடத் தெரிவித்தது.
இதில் திடீர் திருப்பமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்று ஞாயிறு மதியம் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இந்நிலையில் உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து திங்கள் மதியம் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
அன்புள்ள விக்ரம், தயவு செய்து பதிலளிக்கவும். சிக்னலை முறித்துக் கொண்டதற்காக உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த நடக்கும் முயற்சிக்காக, நாக்பூர் நகர காவல்துறை இவ்வாறு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.