புது தில்லி: கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
எப்போதுமே நாங்கள் கலப்புத் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல, இந்து - முஸ்லிம் கலப்பு திருமணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா,எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு.
சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒருவர், இந்துவான தனது மகள் முஸ்லிம் இளைஞரைக் காதலித்தார். முஸ்லிம் இளைஞர் இந்துவாக மதம் மாறியதால் அவரது திருமணத்துக்கு ஒப்புக் கொண்டோம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் மீண்டும் முஸ்லிமாகவே மாறிவிட்டார் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
தந்தையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, கலப்புத் திருமணம் என்ற பெயரில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், நீதிமன்றம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இங்கு திருமணம் பற்றி ஆராய விரும்பவில்லை, சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம் பாதுகாக்கப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நாங்கள் இங்கே சட்டத்துக்காக மட்டும் இல்லை, அப்பெண்ணின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்வதற்காகவே இருக்கிறோம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.
அதே சமயம், நியாயமான கணவராகவும், சிறந்த காதலராகவும் இருக்குமாறு முஸ்லிம் இளைஞருக்கும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.