முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த் (72) மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரது புகார் தொடர்பான விடியோ ஆதாரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் ஒப்படைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், தன்னை சின்மயானந்த் பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை, தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், "புகார் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் மாணவியிடம் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தப் பெண் அவரிடம் இருந்த விடியோ ஆதாரங்களை ஒப்படைத்தார். அதில் 43 விடியோக்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, சின்மயானந்தின் படுக்கை அறையில் இருந்தும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
புகார் அளித்த பெண்ணின் தாயாரிடம் சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது' என்றன.