விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கும் (இஸ்ரோ) , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் (டிஆர்டிஓ) இடையே செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ககன்யான் திட்டத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லவிருக்கும் வீரர்கள், ரஷியாவில் பயிற்சி பெற உள்ளனர். இந்நிலையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான சில வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு டிஆர்டிஓவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளியில் வீரர்களுக்குத் தேவையான உணவு, அவர்களது உடல்நலத்தைக் கண்காணிக்கும் கருவிகள், அவசரக்கால உதவிக்குத் தேவையான பொருள்கள், பாராசூட் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரோ பிரதிநிதிகளும், டிஆர்டிஓ பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்குத் தேவையானவற்றை இஸ்ரோவுக்கு டிஆர்டிஓ வழங்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி கூறுகையில், ககன்யான் திட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.